Wednesday, January 6, 2010

முதிர்கன்னி!!!!



புது மஞ்சள் கயிறுடன்
பூரிப்பு பூசிய பெண்களை
பார்க்க நேர்கையில்
சில சமயம் ஆத்திரமாய்
சில சமயம் வெறுமையாய்
சில சமயம் ஏக்கமாய்
பார்க்க வேண்டியதாகிறது!!

என் வயதொத்த பெண்கள்
இருபத்தி நான்கு மணிநேரம்
போதவில்லை பிள்ளைகளை
கவனிக்க என கூறுகையில்
வேலை,வீடு கோவில் என
வெறுமையாய் கழிக்கிறேன்
என் பொழுதினை!!!!

ஆங்காங்கே தோன்றிய
நரை முடிகளை என்
அம்மாவிற்கு காட்டுகிறேன்
நாசூக்காய்!-அவளோ
நகர்கிறாள் இயலாமையால் !!

எங்கேயோ கேட்கும்
மேளச் சத்தத்தால் என்
காதிரண்டை பொத்திக் கொள்கிறேன்
கண்ணீரை தடுப்பது எவ்வாறு?

உதிர்ந்த இலைகளை
பார்க்கையில்- என்
தொலைந்த இளமையை
நினைவு கொள்கிறேன்!!

உதிர்ந்தது இலைகளும்
இளமையும் மட்டுமல்ல....
என்றோ ஒருநாள்
என்னிடம் தன் காதலை
சொன்னவனிடம்
"என் பெற்றோர் சொல்பவரையே
மணம் செய்வேன்" என்ற
வார்த்தைகளும்தான்!!!!